ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்த நிலையில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்க வரும் உபரி நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கபினி அணை மொத்த கொள்ளளவு ஆன 84 கன அடியை நெருங்க உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு கர்நாடக மாநில அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.
கர்நாடக அணையில் இருந்து புதன்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவானது வியாழக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 9,000 கன அடி ஆகவும்,9 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடி என ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஐவார் பாணியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.