காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் ...
ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வியாழக்கிழமை கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
”ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள்தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்கள்.
ஒரு அந்நிய நாட்டு மொழியில் நமது வரலாறு, கலாசாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமித் ஷாவின் கருத்தை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”ஆங்கிலம் என்பது அணை அல்ல, அது ஒரு பாலம். அவமானம் அல்ல, அது ஒரு சக்தி, சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.
இந்தியாவின் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் கேள்வி கேட்பதையும் முன்னேறுவதையும் போட்டியிடுவதையும் அவர்கள் விரும்பவில்லை.
இன்றைய உலகில் ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போல முக்கியமானது. ஏனெனில், வேலைவாய்ப்பையும் தன்நம்பிக்கையையும் ஆங்கிலம் அதிகரிக்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலத்தை கற்பிக்க வேண்டும்.
உலகத்துடன் போட்டியிடும் ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான பாதை இது மட்டுமே.” எனக் குறிப்பிட்டுள்ளார்.