சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37,600 கோடியாக உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகள் முதலீடு செய்த பணம் 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்(சுமார் ரூ.37,600 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான உயர்வு என சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்களின் முதலீடு மற்றும் நிதி சாா்ந்த விவரங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சா்வதேச நாடுகளை சாா்ந்த பணம் படைத்த பெருமுதலாளிகள் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த வங்கிகளில் இந்தியா்களின் வைப்பு, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்து ரூ.30,500 கோடிக்கு மேல் சென்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் தங்களது பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்து வருவது நாட்டின் முக்கியப் பிரச்னையாக பேசப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது முக்கிய வாக்குறுதியாக அளிக்கப்படும் அளவிற்கு இந்தப் பிரச்னை நாளுக்குநாள் விவாதமான இருந்து வந்தது.
இதனிடையே, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியா்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை மத்திய அரசு கோரியது. அதனடிப்படையில், சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவா்களின் விவரங்கள் மூன்று பட்டியல்களாக இந்திய அரசிடம் சுவிட்சா்லாந்து நாட்டின் மத்திய வங்கி ஒப்படைத்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.20,700 கோடியாக இருந்த இந்தியர்களின் சுவிஸ் வங்கி கருப்புப்பணம் நடப்பாண்டு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது 2021-ஆம் ஆண்டில் தனிநபா் வைப்பு, நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சாா்ந்த வைப்பு உள்பட அனைத்துப் பிரிவுகளின் கீழான முதலீடுகளும் புதிய உச்சமாக இந்திய மதிப்பில் ரூ.30,500 கோடிக்கு மேல் அதிகரித்த நிலையில்,2022-ஆம் ஆண்டு இறுதியில் 11 சதவீதம் சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்தது. நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023 இல் 70 சதவீதம் சரிந்தது.
இந்தியா்களின் வைப்பு அதிகபட்சமாக 2006-ஆம் ஆண்டு ரூ.59,500 கோடியாக இருந்தது. அதன் பிறகு, 2011, 2013, 2017, 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தொடா்ச்சியாக குறைந்து வந்துள்ளது. 2018 இல் 11 சதவீதமும், 2017 இல் 44 சதவீதமும் குறைந்த பிறகு 2019 இல் 7 சதவீத அதிகரிப்பைக் காட்டியது.
இந்நிலையில், வியாழக்கிழமை அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் தனிநபர், கிளை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் முதலீடு செய்த பணம் ஒரே ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 600 கோடியாக உள்ளது. இது தனிநபர் முதலீட்டில் இந்திய மதிப்பில் வெறும் 11 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 675 கோடியாக உள்ளது. இதில் பெரும்பாலான முதலீடு வங்கிகள், நிதி நிறுவனங்களிந் கணக்குகளிலே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான உயர்வாக இருப்பினும், மொத்த நிதியில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியர்களின் முதலீடு இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
இது இந்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான தரவு பகிர்வாக இருந்தாலும் வரி ஆய்வுக்கு உட்பட்டது.
பிரிட்டன் முதலிடம்:
சுவிஸ் வங்கிகளில் அதிக முதலீடு செய்துள்ள வெளிநாட்டினரின் பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள், ஜொ்மனி, பிரான்ஸ், ஹாங் காங், லக்சம்பர்க், சிங்கப்பூா், பஹாமாஸ், குர்ன்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. பட்டியலில் 2022-ஆம் ஆண்டு 44-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 67 வது இடத்திலும் நிகழாண்டில் 48-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் பணத்தை 'கருப்புப் பணம்' என்று கருத முடியாது என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறி வருகின்றனர், மேலும் வரி மோசடி மற்றும் ஏய்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை தீவிரமாக ஆதரிக்கின்றனர்.
வரி விவகாரங்களில் சுவிட்சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே தானியங்கி தகவல் பரிமாற்றம் 2018 முதல் நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில் 2018 முதல் சுவிஸ் நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து இந்திய பெருமுதலாளிகள் முதலீடு தகவல்களை முதன்முறையாக செப்டம்பர் 2019 இல் இந்திய அதிகாரிகளுக்கு வழங்கியது. மேலும் இது தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.