நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்
TVK : 'கருவறை முதல் கல்லறை வரை ஊழல்!' - திமுகவை கடுமையாக சாடும் தவெக
'தவெக அறிக்கை!'
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டு திமுக அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தவெக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

'நெல் கொள்முதல் பிரச்னை!'
தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது!
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
'கருவறை முதல் கல்லறை வரை... ' அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற 'விளம்பர மாடல்' ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது. அதன் காரணமாகவே ஆண்டு முழுதும். 'நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த... அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அதன் ஒரு பகுதிதான், நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து, அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து. தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க அரசு, அவர்கள் உருவாக்கிய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer's Federation of India Private Limited) என்ற நிறுவனத்துக்கு நெல்லை கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியதே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
இந்தத் தகவல் வெளியான போதே டெல்டா மாவட்ட விவசாயிகள், 'தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு, அரசின் பொதுத்துறை நிறுவனமோ... கூட்டுறவு அமைப்போ அல்ல! அது தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், லாரி ஒப்பந்தக்காரர்கள் அடங்கிய தனியார் கூட்டமைப்பு. அவர்களிடம் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லை; அப்படிப்பட்ட அமைப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளிப்பதால், நெல் கொள்முதல் என்பது நாளடைவில் முழுக்க முழுக்கத் தனியார்மயமாகிவிடும்; நெல்லுக்கு உரிய ஆதார விலை கிடைக்காது; விற்பனை செய்த நெல்லுக்குரிய பணமும் கிடைக்காது' என எச்சரித்துப் போராட்டங்களில் இறங்கினர்.
அதோடு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தமிழக அரசு நாளடைவில் இழந்துவிடும் என்றும் எச்சரித்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சமாதானப்படுத்திய தி.மு.க. அரசு. டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியது.
விவசாயிகள், விவசாய சங்கத்தினர் எச்சரித்ததைப் போலவே, எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாட்டில் தனியார் ஏஜென்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கொள்முதல் செய்த நெல்லுக்கான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்த ஏஜென்டுகளிடம் கேட்டால், 'எங்களுக்குப் பணம் வந்தால் உங்களுக்குத் தருகிறோம்' என அலட்சியமாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக எத்தனை விவசாயிகளிடம், எவ்வளவு நெல்லைத் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் கொள்முதல் செய்தது என்பதற்கான விபரங்களே தங்களிடம் இல்லை என்று துறை அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மோசடி தி.மு.க அரசு 'திருடனுக்குத் தேள் கொட்டியது போல்' திகைத்துப் போய் இருக்கிறது. இது ஒருபக்கம் என்றால். “ம் என்றால் சிறைவாசம்..." ஏன் என்றால் வனவாசம்...' என்ற அதிகார மமதையில், அடக்குமுறைகளை ஏவி,
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் துயர் துடைப்போம்" என்று உறுதி கொடுத்துவிட்டு, இன்று அந்த விவசாயிகளையே கண்ணீர் விட வைத்திருக்கும் கபட நாடக ஆட்சியாகத் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்க் கட்சியாக இருந்த நேரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ள திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் ஓடிவந்து குரல் கொடுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர், இன்று அதே திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுப்பதோடு, அவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாதகச் செயலையும் செய்கிறார். ஆனால், 811 கோடி ரூபாய் வரை நெல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முதலமைச்சருக்குப் பங்கிருக்கிறதா? எனவும் திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையிலான விவசாயிகள் எழுப்பும் கேள்விக்கு, முதலமைச்சரின் பதில் என்ன?
நெல் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் திரு.அ.சண்முகசுந்தரம் அவர்களை அந்தப் பொறுப்பில் இருந்து திடீரெனப் பணியிட மாற்றம் செய்தது ஏன்? எட்டுவழிச் சாலைக்காகப் போராடிய அருளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது முதல், விவசாயிகள் தங்கள் தாய் மடியாகக் கருதும் விவசாய நிலங்களைப் பரந்தூர் விமான நிலையத்திற்காகப் பறித்துக் கொண்டு, அந்த விவசாயிகளை ஓலமிடச் செய்தது வரை, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரோத ஆட்சியாகத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடும் விவசாயிகளைக் குற்றவாளிகளைப் போல் கைது செய்வது எந்த வகையில் நியாயம்? வெற்று விளம்பர ஆட்சியைப் போலவே, விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையும் வெற்றுக் காகித அறிக்கையே தவிர வேறு என்ன?
அடக்குமுறையைக் காட்டி விவசாயிகளை ஒடுக்க நினைத்தால், டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் எப்படி வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து ஸ்தம்பிக்க வைத்தார்களோ... அதே நிலை தமிழகத்திலும் நடைபெறும்.
அதற்கான முன்னோட்டம்தான், நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து இன்றைக்கு நடைபெறும் போராட்டங்கள்.
உடனடியாகத் தமிழ்நாடு அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, நெல் விவசாயிகளுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்; இனி வரும் காலங்களில் முன்பிருந்ததைப் போல், தமிழக அரசே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்; அதில் லஞ்சம் - ஊழல் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.