ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான்
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் என சர்வதேச நாடுகளின் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானிடம் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளும் கோரவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஷாஃபகத் அலி கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“ஈரான் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உள்ளது. நாங்கள் ஈரான் அரசுக்கும் எங்களது முழு தார்மீக ஆதரவையும் வழங்குகிறோம். மேலும், ஈரான் மீதான தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என அவர் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது குறித்து ஈரான் அரசிடமிருந்து எந்தவொரு வேண்டுகோளும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்ததோடு, ஈரானுக்கு அவர்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. விதிமுறைகளுக்கு எதிரானவை என்று கூறி, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை 21 இஸ்லாமிய நாடுகள் கூட்டாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தெஹ்ரானில் சிக்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், தற்போது வரை 3,000 பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகம் திரும்பியுள்ளனர்.
இத்துடன், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அனைத்தும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பகுதிகளில் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை உண்டாகக் கூடும் என்பதை வலியுறுத்தி பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார், ஈரான், துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: