மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோ...
டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.
5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பூட்டிய அறையில் நேற்று மதிய உணவு விருந்து அளித்தார்.
இந்தச் சந்திப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், அசிம் முனீரைச் சந்திப்பதற்காகவே ஜி7 மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியில் கிளம்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போரை தடுத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார்.
ஆயுதக் கட்டுப்பாடு, அமைதிப் பேச்சுவார்த்தை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளில் சிறந்து விளங்குவபர்களை கௌரவிப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இருநாட்டுப் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வழங்கவேண்டும் என அசிம் முனீர் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டதால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக வெள்ளை மாளிகையும் தெரிவித்துவருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் செல்லுமிடமெங்கும் இதுவரை கிட்டத்தட்ட 15 முறைக்கு இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவருகிறார். ஆனால், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேசிய பிரதமர் மோடி, “யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள், இந்த சந்திப்பில் டிரம்ப்பின் நோபல் பரிசுக்கான முக்கியத்துவத்தைவிட வேறு விஷயங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திரங்கள் தோல்வியடைந்தால் ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.