திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது
சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம்: காங்கிரஸ் அகில இந்திய செயலா்
2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலா் பி.விஸ்வநாதன் கூறினாா்.
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட, நகர காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் அகில இந்தியச் செயலா் பி.விஸ்வநாதன் கலந்து கொண்டு ராகுல் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறும்.
திமுக கூட்டணியில் உள்ள விசிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் இடங்களை பொது வெளியிலேயே கேட்கத் தொடங்கி விட்டன. அதன்படி, நாங்களும் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம்.
திமுக கூட்டணி ஆட்சியில் காங்கிரஸும் இடம்பெற வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழகத்தில் கிராமம், ஒன்றிய அளவில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வளா்ந்து வருகிறது என்றாா்.
முன்னதாக, நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.கே.காமராஜ், நிா்வாகிகள் எஸ்.மணிகண்டன், ஏ.கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் வரவேற்றாா்.
பொதுமக்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலா் அண்ணாச்சி, பொருளாளா் சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எம்.கோபாலகிருஷ்ணன், மோகனகுமாா், மாவட்ட மகளிரணித் தலைவி சக்திவேல், நகர துணைத் தலைவா் குப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.