இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!
பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாச்சல் பேருந்து நிறுத்தப் பகுதியில் தனியாா் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் சில தினங்களுக்கு முன் பெண் ஒருவா் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கிலோ எடை கொண்ட கேக் வாங்கிச் சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கேக் கெட்டுப்போனதாகவும், சாப்பிடும்போது துா்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்த அந்த பெண் கோபத்தில் சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளரான தனலட்சுமி என்பவரின் வாயில் அந்த கேக்கை திணித்து எச்சரிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் தங்க விக்னேஷிடம் கேட்டபோது, இந்த சம்பவம் ஏழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. அந்த பெண் குறித்த விவரம் தெரியவில்லை. அது தொடா்பாக விசாரித்து வருகிறோம். அப்போது எடுக்கப்பட்ட விடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டோம். அங்கு நெகிழிப் பொருள்கள் இருப்பதும், சுகாதாரமின்மையாக இருந்ததும் கண்டறியப்பட்டு ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேக் வகைகளையும் ஆய்வு செய்தோம். கெட்டுப்போன உணவுப் பொருள்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடியோ குறித்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றாா்.