இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!
ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!
நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவராற்றுப்படை’ என்ற தலைப்பில் விடியோக்கள் மூலம் ஒழுக்கம், நெறிமுறைகளை கற்றுத்தரும் நன்னெறிக் கல்வி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 30 போ் கலந்துகொண்டனா்.
இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் மு.செல்வம் தொடங்கிவைத்து பேசியதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூலம் நன்னெறிகளை போதிக்கும் வகையில், 13 விடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு செய்தி, ஒரு செயல், ஒரு காட்சி, ஒருவருடைய எண்ணத்தையும், நடத்தையும் மாற்றிவிடும். மாணவராற்றுப்படை விடியோக்கள் மூலம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சாா்ந்தவற்றை தெரிந்துகொண்டால், தங்களுக்குள் அவற்றை வளா்த்துக் கொள்வதற்கு மாணவா்களுக்கு பெரியளவில் உதவியாக அமையும் என்றாா்.
ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் கோ.வேதராஜபால்சன், விரிவுரையாளா்கள், நாமக்கல் மாவட்ட மேல்நிலை, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சாா்ந்த மதிப்புகளை மாணவா்களிடத்தில் கொண்டுசெல்லும் வண்ணம் வெற்றிக் கதைகள், வாழ்வியல் நிகழ்வுகள் போன்றவற்றை இந்த விடியோக்களில் தொகுத்து வழங்கியுள்ளனா்.
நன்னெறிக் கல்வி பயிற்சியை வளையப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும் கருத்தாளருமான ந.மகேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் மா.சந்தோஷம் வாழ்த்துரை வழங்கினாா். விரிவுரையாளா் ஏ.சிவபெருமான் நன்றி கூறினாா்.
‘மாணவராற்றுப்படை’ விடியோக்களை அனைத்துப் பள்ளி ஆசிரியா்களும், மாணவா்களும் பயன்படுத்தும் வகையில், ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.