Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி - கோவையை அதிர வைத்த காதல் தம்பதி
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள், “நாங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்தோம். பணம் வங்கியில் இருப்பதால் ஏடிஎம்மில் எடுக்கலாம் என நினைத்தோம்.

பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கார்டு வேலை செய்யவில்லை. மருத்துவமனை சிகிச்சை பெற அவசரமாக ரூ. 2,000 தேவைப்படுகிறது. நீங்கள் பணமாக கொடுத்தால், அதை கூகுள் பே மூலம் அனுப்பிவிடுகிறோம்.” என்று சக்திவேலிடம் கேட்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை என்று கூறியதால் சக்திவேலும் அவர்கள் சொன்னதை நம்பி ரூ. 2,000 தந்துள்ளார். பதிலுக்கு அந்த தம்பதியும் கூகுள் பேவில் பணம் அனுப்பிவிட்டதாக மெசேஜ் காண்பித்துள்ளார். அதைப்பார்த்து சக்திவேலும் பணம் வந்துவிட்டதாக நம்பினார். அந்த தம்பதி அதனுடன் நிற்காமல் மேலும் ரூ.2,000 கேட்டு அதையும் ஜி பே மூலம் அனுப்புவதாக கூறியுள்ளனர்.
சக்திவேல் மீண்டும் அவர்களிடம் ரூ.2,000 கொடுக்க, அந்த தம்பதி பணம் அனுப்பிவிட்டதாக செல்போனில் இருந்த மெசஜை காண்பித்துள்ளனர். சக்திவேலும் சரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சிறிது நேரத்துக்கு பிறகு சக்திவேல் தன் வங்கிக் கணக்கு இருப்பை சோதனை செய்தார். அதில் அந்த தம்பதி கூறியதை போல ரூ.4,000 வரவில்லை. அவர்கள் மோசடி செய்ததை தாமதமாக உணர்ந்த சக்திவேல், இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதே பாணியில் அந்த தம்பதி மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தம்பதியை தேடி வந்தனர். சிசிடிவி கேமரா, அவர்களின் இருசக்கர வாகன பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடந்தது.
இதில் அந்தத் தம்பதி சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் அவருடைய மனைவி ஷர்மிளா பானு என்று கண்டறியப்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் தான் திருமணம் செய்துள்ளனர். சக்திவேலை போல மொத்தம் 112 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ரிஸ்வான் கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார்.

அப்போது ஒருவர் இதே மாதிரி மோசடியில் ஏமாந்ததாக கூறியுள்ளார். அப்போது முதல் அவர் தன் மனைவியுடன் இணைந்து மோசடியில் இறங்கியுள்ளார். காவல்துறையினர் தம்பதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கூகுள் பே மூலம் பணம் அனுப்பும் போது ‘Pay’ மற்றும் ‘Request’ என இரண்டு குறியீடுகள் காட்டும்., அதில் பே என்பதை பயன்படுத்தினால் பணம் சென்றுவிடும். அதுவே ரிக்வஸ்ட் என்பதை அழுத்தினால் பணம் செல்லாது. சம்பந்தப்பட்டவர் உங்களிடம் பணம் கேட்கிறார் என்று மெசேஜ் மட்டும் வரும். அதை பலர் சரியாக கவனிப்பதில்லை.

அதை இந்த தம்பதி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் எண்ணை பிளாக் லிஸ்ட்டில் போட்டு வந்துள்ளார். மக்களிடம் இப்படி யாராவது பணம் கேட்டால் இதை சரியாக கவனிக்க வேண்டும். மேலும் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.” என்றனர்.