அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!
தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு நாகர்கோயில் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகின்றன.
அந்தியோதயா ரயில்
தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரயில்(20691) வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும்.
அதேபோல நாகர்கோயிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்(20692) வருகிற ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும்.
நெல்லை - நாகர்கோயில் இடையே ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.


நாகர்கோயில் ரயில்கள்
அதேபோல நாகர்கோயில் ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
வார்த்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோயில் அதிவிரைவு ரயில்(22657) வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் நாகர்கோயிலில் காலை 6.45 மணிக்கு செல்லும். பின்னர் 6.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.25 மணிக்கு சென்றடையும்.
மறுவழியில் இதே ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும். ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை இந்த நடைமுறை தொடரும்.
இதேபோன்று தாம்பரம் - நாகர்கோயில் இடையே இயக்கப்படும் மற்றொரு வாராந்திர ரயில்(12667) ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படுகிறது. மறுவழியில் நாகர்கோயிலுக்குப் பதிலாக கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நாகர்கோயில் ரயிலும்(12689) ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. மறுவழியில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.