ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்; இந்தியா வலுவான தொடக்கம்!
பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் அனுமதியோ கையெழுத்தோ தேவையில்லை என பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் கையெழுத்து வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, "பெண்ணின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளபோது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறுவது சரியல்ல.
ஏற்கனவே கணவன்- மனைவி உடனான உறவில் பிரச்சனை இருக்கும் நிலையில் கணவரிடம் இருந்து கையெழுத்து பெறுவது என்பது அந்த பெண்ணுக்கு இயலாத காரியம்.
கணவரிடம் கையெழுத்து பெற வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் ஒரு பெண்ணை கணவனின் உடமையாகக் கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது. திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை.
எனவே, மனுதாரர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்தைப் பெற வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.