சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வருகை தந்தார். சேலம் உருக்காலையை அப்போது அவர் ஆய்வு செய்தார்.
இதனிடையே 2-வது முறையாக அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அவருக்கு சேலம் உருக்காலை விருந்தினர் மாளிகையில் உருக்காலை நிர்வாக இயக்குனர் பிரபீர் குமார் சர்க்கார் தலைமையில் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் உருக்காலை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்று மரக்கன்றை நட்டு வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமி, உருக்காலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் உருக்காலை பணியாளர்களுடன் இணைந்து யோகா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வுக்கு பின்னர் சேலத்தில் தங்கும் அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, சனிக்கிழமை காலை உருக்காலை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தலைமையில் சேலம் உருக்காலை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்கின்றனர்.