அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!
கென்யாவின் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்துவதற்கான அதானியின் ஒப்பந்தம் ரத்தானபோது மிகவும் ஏமாற்றமடைந்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராயிலா ஒடிங்கா தெரிவித்துள்ளார்.
கென்யா தலைநகர் நைரோபியிலுள்ள ஜோமோ கென்யாட்டா பன்னாட்டு விமான நிலையத்தை, விரிவுப்படுத்தி நிர்வாகிக்க அதானியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரையிலா ஒடிங்கா பேசியுள்ளார்.
அந்த ஒப்பந்தம் அரசியலாக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தின்படி தொடர்ந்திருந்தால் தலைநகர் நைரோபி பொருளாதார நகரமாக உருவாகியிருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
“விமான நிலையத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டபோது, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். 2012 ஆம் ஆண்டு எங்களது ஆட்சியில் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம், எங்கள் ஆட்சி முடிவடைந்தவுடன், அந்த ஒப்பந்தம் முதல்முறை ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் அதானியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது. நாங்கள் அதானியை தொடர்பு கொண்டவுடன், அது அரசியலாக்கப்பட்டது
ஒருவேளை அந்த விமான நிலையத்தின் கட்டுமானம் நிறைவடைந்திருந்தால், ஆப்பிரிக்காவின் முதன்மையான விமானப் பாதையாக அது இருந்திருக்கக் கூடும் ” என அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, விமான நிலையம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், 2வது ஓடுபாதையை அந்த விமான நிலையத்தில் உருவாக்கி, சுமார் 30 ஆண்டுகளுக்கு பயணிகள் முனையத்தை நிர்வாகிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!