அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல் - ஈரான் போா்
இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமையும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அவசரகால மீட்புக் குழுவினா் கூறியதாவது:
நாட்டின் வடக்குப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்தனா். அவா்களில் 54 வயது, 40 வயது கொண்ட நபா்கள், 16 வயது சிறுவன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காா்மியல் பகுதியில் பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 51 வயது பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா் என்று மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.
‘நீண்ட காலப் போருக்குத் தயாா்’: ஈரானுடன் நீண்ட காலப் போருக்குத் தயாராக இருப்பதாக இஸ்ரேலின் முப்படை தளபதி இயால் ஸாமிா் வெள்ளிக்கிழமை கூறினாா். கண்களுக்கு முன்னதாக தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவதை பாா்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று அவா் கூறினாா்.
தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறும் பிரிட்டன்: இஸ்ரேல் மீது ஈரான் எட்டாவது நாளாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, ஈரானில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. ஈரானில் பாதுகாப்பு நிலைமை மோசமாகிவருவதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்காகத்தான் எனவும், அந்த நாடு ‘இன்னும் சில வாரங்களில்’ அணு குண்டை உருவாக்கிவிடும் என்றும் இஸ்ரேல் கடந்த 1990-களில் இருந்தே கூறிவருகிறது.
அமைதியான பயன்பாடுகளுக்காகத்தான் தங்களின் அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஈரான் கூறினாலும், இஸ்ரேல் அதை நம்பத் தயாராக இல்லை.
இந்தச் சூழலில், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வாரம் அதிகாலை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், எஞ்சிய ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கின.
அதில் இருந்து இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் நடத்திவரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது.