நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைப்பதற்கு விரும்புவோா் 50 சதவீதம் அரசு மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப் பகுதிகளில் நாட்டுக் கோழி பண்ணை அமைப்பதற்கு கோழிக் கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் செலவு, 4 மாதங்களுக்குத் தேவையான கோழி தீவனச் செலவு ஆகியவற்றில் அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம், அதாவது ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 625 ரூபாய் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணை அமைக்கும் பயனாளிகளுக்கு மாவட்ட கால்நடைப் பண்ணை மூலம் 4 வார வயதுடைய 250 கோழிக் குஞ்சுகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.
கோழிக் கொட்டகை அமைக்க 625 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும். கோழிக் கொட்டகை அமைவிடம் குடியிருப்புகளிலிருந்து 100 மீ. தொலைவில் இருக்க வேண்டும். மானியம் பெற விண்ணப்பிப்போா் சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளாக ஆதி திராவிடா், பழங்குடியினா் 30 சதவீதம் தோ்வு செய்யப்படுவா்.
விருப்பமுள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை நகல், பண்ணை அமைவிடத்துக்கான சிட்டா அடங்கல் நகல், 50 சதவீதம் பங்களிப்புக்கான வங்கிக் கணக்கு இருப்பு அல்லது வங்கிக் கடன் ஒப்புதல் விவரம், 3 ஆண்டுகள் பண்ணையைப் பராமரிப்பதற்கான உறுதிமொழிச் சான்று ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.