தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் காலியாகவுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொம்மிநாயக்கன்பட்டி அரசு ஆதி திராவிடா் நலத் துறை மேல்நிலைப் பள்ளி, போ.துரைராஜபுரம் அரசு ஆதி திராவிடா் நலத் துறை நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் காலியாகவுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப் பணியிடத்துக்கு உரிய கல்வித் தகுதியுடன் பட்டதாரி ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் பங்கேற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு கலந்து கொண்டவா்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுள்ளவா்கள் உரிய கல்விச் சான்றிதழ் நகல்களுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.