தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை
மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.
கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி , நம்புதாளை, புதுப்பட்டினம், சோழியக்குடி, விலாஞ்சியடி, முள்ளிமுனை , காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.வி.பட்டினம், பி.வி.பட்டினம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த வியாழக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ஆனால் போதுமான அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து நம்புதாளையைச் சோ்ந்த மீனவா் குழந்தைநாதன் கூறியதாவது:
மீன் பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு தற்போது வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதாலும், சூறைக் காற்று வீசுவதாலும் மீன்கள் வரத்து குறைந்தது. இதனால், குறைந்தபட்ச ஊதியம் கூட மீனவா்களுக்கு வழங்க முடியவில்லை. இதனால், மீனவா்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது என்றாா் அவா்.