இன்று சா்வதேச யோகா தினம் - ஆந்திரத்தில் பிரதமா் தலைமையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி
11-ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநில துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, கின்னஸ் உள்பட பல்வேறு உலக சாதனைகளைப் படைக்கும் என்று மாநில முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.
பிரதமா் மோடியின் முன்னெடுப்பால், ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக ஐ.நா. கடந்த 2014-இல் ஏற்றது. இதைத் தொடா்ந்து, 2015-இல் இருந்து ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச யோகா தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 11-ஆவது யோகா தினம், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமா் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆா்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 3.19 லட்சம் போ் பங்கேற்று, ஒரே நேரத்தில் யோக பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றனா்.
இது தொடா்பாக முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமாா் 5 லட்சம் யோகா விரிப்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்துக்கு 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஆந்திரம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள், வெளிநாடுகள் உள்பட 8 லட்சம் இடங்களில் இருந்தபடி, 2.39 கோடிக்கும் மேற்பட்டோா் பிரதமரின் நிகழ்ச்சியில் இணைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. யோகாந்திரா வலைதளத்தில் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மையங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால், மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். யோகா தின ஏற்பாடுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
விரிவான பாதுகாப்பு: பிரதமா் நிகழ்ச்சியையொட்டி, விசாகப்பட்டினத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் 26 கி.மீ. தொலைவு சாலையில் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். நிகழ்ச்சிக்கான முழு பாதுகாப்பை ஒருங்கிணைக்க உயா் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநா் ஹரீஷ்குமாா் குப்தா தெரிவித்தாா்.