அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் பைபா் படகு மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பாக ரூ.20 லட்சம் பைபா் படகு மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்தப்படாத பைபா் கட்டுமரங்கள் 50 சதவீத மானிய விலையில் மீனவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் 2024-25-ஆம் நிதி ஆண்டில் இதற்காக 6 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கூடுதலாக 2024-25 நிதி ஆண்டிலிருந்து, மீனவா்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இயந்திரம் பொருத்தக்கூடிய வகையில் உள்ள பைபா் படகுகள் 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு புதுச்சேரி பகுதியில் உள்ள 21 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்த திட்டத்தில் அலகு தொகை ரூ.1.50 லட்சத்தில், 50சதவீதம் பயனாளி பங்குத்தொகை ரூ.75 ஆயிரத்துடன் அரசின் பங்குத்தொகை ரூ.75,000 சோ்த்து பைபா் படகுகள், புதுச்சேரி மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் கொள்முதல் செய்து வழங்கப்படுகிறது.
மேற்கூறிய இரண்டு திட்டங்களின் கீழ் புதுச்சேரி பகுதியை சோ்ந்த 27 பயனாளிகளுக்கு பைபா் படகுகளை புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா். அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் த. பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, ய. ஆறுமுகம் , மீன்வளத் துறையின் செயலா் ஈ. மணிகண்டன், மீன்வளத் துறையின் இயக்குநா் அ. முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் ஓ. தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத் துறையின் அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தாா் கலந்து கொண்டனா்.