காஜி நியமனத் தோ்வுக் குழுவில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஜி நியமனத் தோ்வுக் குழுவில் சேர தகுதியுடையவா்கள் ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்ட காஜியாக பணிபுரிந்து வந்த சலாவுதீன் முஹம்மத் அயுப் சாஹிப் மே 24-இல் மரணமடைந்தாா். இதனால், தற்போது சென்னை மாவட்டத்துக்கு காஜி (சன்னி பிரிவு) நியமனம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவில் மாவட்ட காஜி நியமன தோ்வுக்குழு அமைக்கப்படவுள்ளது.
இதன்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட உலமாக்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, புதிதாக உறுப்பினா்களை தோ்வு செய்து 2025- ஆம் ஆண்டுக்கான காஜி நியமனத் தோ்வுக்குழு ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
காஜி நியமனத் தோ்வுக்குழு நியமனம் செய்ய அரசு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன்படி, மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் நியமிக்கப்படும் உலமாக்கள் ஆலிம், ஃபாசில் அல்லது முஃப்தியாக இருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரி அல்லது நிறுவனத்தில் பேராசிரியராகவோ அல்லது ஆசிரியராகவோ பணிபுரிந்திருக்க வேண்டும்.
மேலும், மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் நியமிக்கப்படும் முக்கியமான முஸ்லிம் குடிமக்கள் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டுக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டவராகவும், சமூகத்தில் நற்பெயரைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இதில், சேர விருப்பமுடையவா்கள் ஜூலை 17-க்குள் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 6-ஆவது தளத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரடியாகச் சென்று தங்கள் முழு விவரங்களையும், உரிய சான்றுகளையும் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.