Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா.. என்ன நடக்கிறது?
இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
அதே நேரம் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ரஷ்யா, ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தைத் தாக்குவதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்துள்ளது. அதனால் இந்தப் போரின் தீவிரம் நாளுநாள் கூடிக்கொண்டே செல்கிறது.

இந்தப் போரை தொடர்ந்து நேற்று இஸ்ரேலுக்கான நார்வே தூதரின் வீட்டின் மீது ஒரு கையெறி குண்டு வீசப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ``இஸ்ரேலுக்கான நார்வே தூதர் பெர் எகில் செல்வாக் உடன் பேசினேன், அவரது வீட்டு முற்றத்தில் இன்று மாலை ஒரு கையெறி குண்டு வீசப்பட்டது.
இந்த கடுமையான, ஆபத்தான குற்றத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இதைச் செய்த குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க இஸ்ரேல் காவல்துறை தீர்க்கமாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், ஹைஃபா மற்றும் டெல் அவிவில் உள்ள இராணுவ தளங்களில் ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக ஈரானிய இராணுவம் டெலிகிராம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இராணுவ மற்றும் இராணுவ-தொழில்துறை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களின் விரிவாக்கம் இருக்கும் என எச்சரித்திருக்கிறது.
அதேநேரம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு முழு இஸ்ரேலும் விலை கொடுக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.