'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏன்? அமெரிக்கா தலையிடுமா? - முழுமையான அலசல்! | களம்: Iran vs Israel
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
ஈரான் மீது இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை தொடுத்த வான் தாக்குதல்களை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வெடித்திருக்கும் ஏவுகணைப் போர் இன்று ( ஜூன் 20) ஏழாவது நாளாகத் தொடர்ந்து மத்தியக்கிழக்கில் மேலும் பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.
`ஈரானின் அணு சக்தித்திட்டதை அழிப்பதுதான் நோக்கம்’ என்று இஸ்ரேலால் தொடங்கப்பட்ட இந்த வான் தாக்குதல்கள் இப்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவது என்ற வகையில் இஸ்ரேலிய அரசால் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவும் இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களத்தில் குதிக்குமா என்ற யூகங்கள் வலுத்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தின் இயந்திரம் என்று சொல்லப்படும் மத்தியக்கிழக்குப் பகுதியில் ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

தொடர்ந்து இரு நாடுகளின் தாக்குதல்களில் கணிசமான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஈரானைப் பொருத்தவரை , இஸ்ரேலின் முதல் நாள் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ( IRGC) தலைமைத் தளபதி ஹொசைன் சலாமியை இழந்தது. தொடந்து இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 11 மூத்த ராணுவத் தளபதிகளை மட்டுமல்லாமல், அதன் அணு சக்தித் திட்டத்தின் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் இஸ்ரேலால் குறிவைத்து கொல்லப்பட்டது ஈரானுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஈரானிய சமூகத்தில் நிலவும் அரச எதிர்ப்புக் குழுக்கள் துணையுடன்..!
ஈரானிலேயே வீட்டிலும் அலுவலகங்களிலும் இருந்த ராணுவத் தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேலால் குறிவைத்துக் கொல்லப்படும் இந்த சம்பவங்கள் புதிதல்ல. இதற்கு முன்னர் இஸ்ரேல் , லெபனானில் உள்ள ஈரானிய துணை தூதரகத்தைத் தாக்கி அதில் இருந்த ஈரானிய உயர் ராணுவ அதிகாரிகளைக் கொன்றிருக்கிறது. சிரியாவில் இது போன்ற தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலேயே, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியேவை கொன்றிருக்கிறது. ஈரானிய சமூகத்தில் நிலவும் அரச எதிர்ப்புக் குழுக்கள் துணையுடன், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் இணைந்து நீண்ட காலமாக செயல்பட்டுவருவதன் விளைவுதான் இது என்று ஈரானிய வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் , ராணுவத் தளபதிகள் மட்டுமல்லாமல், ஈரானின் தலைநகர் டெஹரான் உட்பட பல முக்கிய நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதே போல, ஈரானிய அணுசக்தி நிலையங்கள் இருக்கும் நதான்ஸ் , இஸ்பஹான்ஸ் போன்ற நகரங்களிலும் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது தொடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் பல இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆறாம் நாள் போரில் , ஈரான் ஏவிய ஒரு ஏவுகணை இஸ்ரேலின் தென் பகுதியான பியர்ஷிபா நகரில் ஒரு மருத்துவமனையின் மீது விழுந்துள்ளது.
ஈரான் ஏவுகணை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி ஒரு கணிசமான ஏவுகணை வல்லமை பெற்றிருந்தாலும், இஸ்ரேல் தற்காப்புக்காக வைத்திருக்கும் அமெரிக்காவின் கொடையான “ இரும்புக்கூரை” (iron dome) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, மற்றும் Arrow 2, Arrow 3 , Thaad போன்ற அமைப்புகள் தயவால் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களில் பெரும்பாலானாற்றை தடுத்திருக்கிறது. ஆனால், ஈரான், இந்த தற்காப்பு அமைப்பையும் மீறி குறிப்பிட்ட அளவு சேதத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் மீது தாக்குதல் ஏன் ?
ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்திருக்கும் இந்த ஏவுகணைப் போருக்கு உடனடிக் காரணங்கள் என்பது இஸ்ரேல் மீது 2023 அக்டோபரில் ஹமாஸ் தொடுத்த தாக்குதலும் , அதைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தித்திட்டம் பற்றிய இஸ்ரேலின் அச்சங்களும்தான்.
ஹமாஸ் தாக்குதலை அடுத்து , ஹமாஸ் இயக்கத்தை வேரறுக்க இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு , ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதியின் மீது தொடுத்த தாக்குதல், ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகளை அழித்தது மட்டுமல்லாமல், காசாவின் பொதுமக்களுக்கும் பேரழிவைத் தந்தது.
ஹமாஸ் ஈரானின் ஆதரவு பெற்ற இயக்கம் என்ற உண்மை இஸ்ரேலுக்கு ஈரான் மீது ஏற்கனவே இருந்த விரோதத்தை அதிகரித்தது. இதனிடையே, ஈரானின் ஆதரவு பெற்ற , ஹெஸ்பொல்லா அமைப்பும் ( இது இஸ்ரேலின் வடக்கே இருக்கும் லெபனானில் இருந்து இயங்கும் ஷியா ஆயுதக்குழு) , இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது.

கடந்த ஆண்டு காசா போரை ஒரு பக்கம் நடத்திக்கொண்டே, வடக்கே ஹெஸ்பொல்லா மீதும் இஸ்ரேலியப் படை தாக்குதல்களை நடத்தியது. ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனானில் இஸ்ரேலின் விமானப்படை நடத்திய ஒரு வான் தாக்குதலில் கொல்லப்பட்டது ஈரானுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவே கருதப்பட்டது.
அதே போல ஈரானின் ஆதரவு பெற்ற மற்றொரு ஆயுதக்குழுவான யேமனின் ஹூத்தி இயக்கத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.
இந்தக் குழுக்களுக்கு நிதி மற்று ஆயுத உதவி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டிய ஈரான் மீதும் கடந்த ஆண்டு இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் மீது நடந்த இந்த தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 100 ஏவுகணைகளை வீசியது. இந்த தாக்குதல்களில் பெரும் சேதம் இரு தரப்பிலும் ஏற்படவில்லை என்றாலும், இரண்டு நாடுகளும் குறியீட்டளவில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டும் ஒரு நகர்வாகவே இவை பார்க்கப்பட்டன.
இதனிடையே காசா போரில் பெரும் அழிவினை ஏற்படுத்திய பின்னரும் இஸ்ரேல் எதிர்பார்த்த முழு வெற்றி என்பது இன்னும் கிடைக்கவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் தலைமை முற்றிலும் அழிக்கப்பட்டது, அதன் ராணுவ வல்லமை குலைக்கப்பட்டுவிட்டது என்பதைத்தவிர, காசாவின் எதிர்காலம் என்ன என்பதெற்கெல்லாம் இன்னும் பதில் இல்லை.
இந்நிலையில், ஈரான் மீது தன் கவனத்தைத் திருப்பினார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அமெரிக்காவில் கடந்த நவம்பரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேலுக்கும் மேலும் ஆதரவு தரும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
ஈரானின் அணு சக்தித்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் ட்ரம்ப் நிர்வாகம், இது குறித்த எச்சரிக்கைகளை மீண்டும் விடுக்கத் தொடங்கியது.
அமெரிக்கா ஈரானை மேலும் இறுக்குவதைப் பார்த்த நெதன்யாகு அரசு, இந்த மாதம் வெளிவந்த சர்வதேச அணுசக்திக் கழகத்தின் ( IAEA ) காலாண்டு அறிக்கை ஈரான் தனது அணுசக்தி பரவலாக்க எதிர்ப்புத்திட்டத்தின் கீழ் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லை என்று கூறியிருந்ததை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு இந்தத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
ஆட்சி மற்றம் - இஸ்ரேலின் உண்மையான இலக்கு?
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை நிர்மூலமாக்குவதுதான் தனது பாதுக்காப்புக்கு ஒரே வழி என்பது இஸ்ரேலின் பிரகடனம். ஆனால் நெதன்யாகு அத்தோடு நிற்காமல், இப்போது இந்தப் போர் ஈரானில் அரசியல் ஆட்சி மாற்றத்துக்கும் வழி வகுக்கும் என்று கூறியிருக்கிறார். அது நடக்கும் வரை போர் நடக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது கூட , நெதன்யாகு ஈரானியர்களுக்கு நேரடியாக இதே போன்ற ஒரு செய்தியைச் சொல்லியிருந்தார்.
அதாவது இஸ்ரேல் ஈரானியர்களை , இஸ்லாமிய மதத்தீவிரவாத அரசிடமிருந்து விடுதலை பெற உதவும். அதற்கு ஈரானிய மக்களும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று நேரடியாகவே அவர் ஈரானியர்களுக்கு ஒரு வீடியோ செய்தி மூலம் கூறியிருந்தார்.
இதே செய்தியை இப்போதும் அவர் மீண்டும் ஈரானிய மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் சொல்லியிருக்கிறார்.
ஆனால், ஈரானியர்களுக்கு தங்களை 1979-லிருந்து ஆளும், இஸ்லாமிய அரசின் மீது என்னதான் வெறுப்பும் கோபமும் இருந்தாலும், பாலத்தீனப் பிரச்சனையில் தொடர்ந்து இஸ்ரேலின் நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த மத்தியக்கிழக்குப் பகுதி மக்களின் வெறுப்புணர்வு மேலோங்கியிருக்கும் இச்சூழலில், இஸ்ரேலின் இந்த தாக்குதல் உள்நாட்டில் அரசின் மீது இருக்கும் வெறுப்பு மற்றும் கோபதாபங்களை தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளி, ஈரானியர்களை அரசின் பின் திரளவே வழி வகுக்கும் என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் கடுமையான தாக்குதலில் ஈரான் அரசு பலவீனப்படுத்தப்பட்டால் , ஈரானிய அரசால் ஒடுக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சிகளும், கருத்து மாறுபடுபவர்கள், மற்றும் குறிப்பாக பெண்கள் போன்ற சமூகப் பிரிவினர் அரசுக்கு எதிராக கலகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஒரு போதும் பணிந்து போகாது என்று ஈரானின் 86- வயதான அதி உயர் தலைவர் அயோதுல்லா அலி கமேனி சூளுரைத்திருக்கிறார்.
தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைத்த்தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இத்தாக்குதல்கள் நிலவழித் தாக்குதலாக மாறுவது , ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள புவியியல் ரீதியான தொலைவு காரணமாக , கடினமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தலையிடுமா ?
ஆனால் அமெரிக்கா இந்தப் போரில் நேரடியாக தலையிட்டால் நிலைமை மாறும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்தது போல , ஈரானிலும் தலையிடுமா ?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இருந்தே வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கப் படைகள் தலையிடுவதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கிறார்.
அவரது குடியரசுக் கட்சியில் செல்வாக்கான ஒரு பிரிவினரும் இதே கொள்கையைத்தான் கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது தாக்குதலை தொடங்கியபோது, இத்தாக்குதல் நடக்கும் என்று தனக்குத் தெரியும் ஆனால் அதை தான் ஆதரிக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகளோ , ட்ரம்ப் நிர்வாகத்தின் பச்சைக்கொடி காட்டப்பட்ட பின்னர்தான் தாக்குதல் தொடங்கியது என்று கூறியிருக்கிறார்கள்.
போர் தொடங்கிய ஓரிரு நாட்களில் ட்ரம்பின் கருத்துகள் மெல்ல மெல்ல இஸ்ரேலின் கடும்போக்கு நிலைக்கு ஆதரவானதாகவே வந்திருக்கின்றன. “ஈரானிய தலைவர் அயோதுல்லா கமேனி இருக்கும் இடம் அமெரிக்காவுக்குத் தெரியும், அவர் கவலை கொள்ளத் தேவையில்லை - தற்போதைக்கு “ என்று தனது Truth Social தளத்தில் பதிவிட்டிருந்தார் ட்ரம்ப். ஈரான் பேச்சுவார்த்தை தூதுவிடுவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு இது நேரமல்ல , ஈரான் முழுமையாக சரணடைய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
ஆனால் ட்ரம்ப்பின் இந்த மிரட்டல்கள் எல்லாம், ஈரானை அதன் அணு சக்தி திட்டத்தை கைவிட வைக்கும் ஒரு யுக்தியா, அல்லது உண்மையில் அமெரிக்கா, ஈரானில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த போரில் இறங்குமா?