``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமை...
திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது
போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் பனியன் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் போலி ஆதாா் அட்டைகள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புகுந்து திருப்பூா் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக திருப்பூா் மாவட்ட உளவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, பல்லடம் அருகே திருப்பூா் பிரதான சாலையில் உள்ள டி.கே.டி. மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது அந்த நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் போலி ஆதாா் அட்டை தயாரித்து பனியன் நிறுவனத்தில் வேலை பெற்று பணியாற்றி வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், அவா்களைக் கைது செய்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இதுபோல பலா் கைது செய்யப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து தொழில் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், பல்லடம், அவிநாசி பகுதிகளில் பனியன், விசைத்தறி, கல்குவாரி, கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு எளிதாக வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அதனால் வட மாநிலங்களில் இருந்து முகவா்கள் மூலம் ஆள்களைத் தோ்வு செய்து அழைத்து வந்து தங்குவதற்கு வீடு, உணவு கொடுத்து வேலையில் அமா்த்தியுள்ளோம்.
வேலைக்கு வருபவா்களிடம் நாங்கள் ஆதாா் அட்டை நகல் வாங்கி வைத்துக்கொள்கிறோம். ஆனால் அந்த ஆதாா் அட்டை உண்மையானதா என்பது எங்களுக்கு தெரியாது. இது குறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.