ஈரான் Vs இஸ்ரேல்: "எதிர்பாராத தீய விளைவுகளை..." - அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா!
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அமெரிக்காவின் ராணுவ தலையீடு பற்றி கடுமையாக எச்சரித்துள்ளது ரஷ்யா.
ரஷ்ய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த சூழலில் வாஷிங்டன் (ஈரான் - இஸ்ரேல் போரில்) ராணுவ தலையீடு செய்வதை எச்சரிக்க விரும்புகிறோம், அது ஆபத்தான ஒன்றாகவும் எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைத் தரக்கூடியதாகவும் இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

புதின் - ட்ரம்ப் பார்வைகள் என்ன?
புதன் அன்று, ரஷ்யா மற்றும் யுனைடட் அரபு எமிரேட்ஸ் இணைந்து, ஈரானின் அணுசக்தி பிரச்னைக்கு இராஜதந்திர மற்றும் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதை பரிந்துரைத்தனர்.
கடந்த வாரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை அழைத்து சமதானப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வருவதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மத்தியஸ்தம் செய்வதை நிராகரித்தார். ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
""விளாடிமிர் முதலில் ரஷ்யாவை மத்தியஸ்தம் செய்வோம். நீங்கள் இதைப்பற்றி பிறகு கவலைப்படலாம்" என நான் ரஷ்ய அதிபரிடம் கூறினேன்" என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா கட்டிய அணுமின் நிலையம் தாக்கப்பட்டதா?
ரஷ்ய அணுசக்தி கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸி லிக்காச்சேவ், ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் மீதான தாக்குதல் "செர்னோபில் பாணி பேரழிவிற்கு" வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
புஷேர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டதா இல்லையா என்பதற்கு இஸ்ரேல் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
ஈரானில் இருக்கும் ஒரே அணுமின் நிலையமான புஷேர், ரஷ்யாவால் கட்டிக்கொடுக்கப்பட்டது என ராய்டர்ஸ் தளம் கூறுகிறது.
கடந்த புதன் (18.06.2025) அன்று, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவிகள் வழங்குவது பற்றி, "யூகமான அல்லது அணுமானமான நாட்டங்களைக் கூட நாங்கள் எச்சரிக்கிறோம். (அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கினால்) அது முழு நிலைமையையும் சீர்குலைக்கும் சூழலை உருவாக்கும் நடவடிக்கையாக இருக்கும்" என அவர் கூறியிருந்தார்.