மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோ...
கும்பகோணம்: முதல்வர் திறந்து வைத்த அலுவலகம்; மூன்றே நாளில் இடிந்து விழுந்த மேற்கூரை பூச்சு!
கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ளது சூரியனார் கோவில் ஊராட்சி. இங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதி என இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் வந்தார். 16ம் தேதி தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இதில் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சூரியனார் கோயில் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

முதல்வர் திறந்து வைத்து மூன்று நாட்களே ஆன அந்த கட்டடத்தின் மேற்கூரையின் உள்பூச்சு முற்றிலுமாக இடிந்து விழுந்து விட்டது. திறப்பு விழாவிற்காக கட்டப்பட்ட வாழை மரம், அலுவலகத்திற்குள் பூஜைக்கு வைக்கப்பட்ட பழங்கள்கூட இன்னும் காயவில்லை. ஆனால் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் பேசு பொருளாகியிருக்கிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது, ``ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி தரமில்லாமல் அவசர கதியில் செய்யப்பட்டது. அப்போதே இதில் விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இதையடுத்து 16ம் தேதி முதல்வர் இதை காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக அறிவித்தனர். முதல்வர் திறந்து வைப்பதற்கு முதல் நாள் கட்டடத்தின் இரண்டு அறைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது.

வெளியே தெரிந்தால் சிக்கலாகும் என்பதால், அதிகாரிகள் இதை மறைத்ததுடன் இடிந்த அந்த இடத்தை அவசர அவசரமாக பூச வைத்தனர். மேலும் முதல்வரை வைத்து திறக்கவும் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பொருள்களை புதிய கட்டிடத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டில் அதன் ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில், பெரிய ஹாலில் கட்டடத்தின் மேற்கூரை உள்பூச்சு இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாரும் உள்ளே இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. ரூ.300க்கு கட்டிய வாழை மரம் கூட இன்னும் காயவில்லை. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததை என்னவென்று சொல்வது. இதன் மூலம் இக்கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

எனவே, இந்த தொகுதியைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்டட செயற்பொறியாளர்கள் ஆகியோர் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, அதன்பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.