ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்
Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது.
அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நண்பர்கள். உறவினர்கள் என ஏராளமானோர் வந்து கண்ணீர் மல்க சுமீத் சபர்வால் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வீடு இருக்கும் கட்டிட வளாகத்தில் இருந்த கோயிலில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் சோகத்துடன் பக்திப்பாடல்களை பாடினர்.
சுமீத்தின் 88 வயது தந்தை தனது மகனின் உடலுக்கு அருகில் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தார். வந்தவர்களுடன் அவரால் பேச முடியவில்லை.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொழிலதிபர் நிரஞ்சன் ஹிராநந்தினி இது பற்றி கூறுகையில்,'' இளம் வயதில் உயிரை எடுத்துக்கொண்டது மிகவும் சோகமான ஒரு நிகழ்வு. இதுபோன்று உயிர்கள் போவதை நாம் தாங்கிக் கொள்ள முடியாது. குடும்பம் பேரழிவை சந்தித்துள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே முக்கியமாகும்''என்றார்.
இறுதிச்சடங்கில் ப ங்கேற்க வந்த மற்றொரு ஓய்வு பெற்ற பைலட் விபத்தில் இறந்து போன சுமீத்துடன் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். அவர் இது குறித்து கூறுகையில்,''சுமித் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அடுத்தவர்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவர் தனது தந்தையை மிகவும் அன்பாக கவனித்துக்கொண்டார்'' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
பிரார்த்தனை முடிந்த பிறகு உடல் ஊர்வலமாக சக்காலா மின்மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. காலையில் மழை பெய்து கொண்டே இருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் வந்து சுமீத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கேப்டன் சுமீத்(56) இது வரை 8200 மணி நேரம் விமானம் ஓட்டி இருக்கிறார். அவர்தான் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் விமானம் மேலே எழும்ப சிரமப்படுவதாக எச்சரிக்கை செய்தவர்.
சுமீத் வயதான தனது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் விபத்து அவரது உயிரை பறித்துக்கொண்டது.
இதனால் சுமீத் தந்தை இப்போது அனாதையாகி இருக்கிறார். சுமீத் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1994-ம் ஆண்டில் இருந்து சுமீத் ஏர் இந்தியாவில் பணியாற்றி வருகிறார். சுமீத்துடன் பணியாற்றிய பைலட் கிளைவ் குந்தார் உடலும் இன்று காலையில் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடகம் செய்யப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தில் பணியாற்றிய ஸ்ரத்தா தவான் மற்றும் பணிப்பெண் சாய்நீதா ஆகியோரின் உடல்களுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.
சாந்தாகுரூஸ் மேற்கு பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற சாய்நீதாவின் தாயார் தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அழுதவண்ணம் இருந்தார்.
சாய்நீதாவின் மற்ற உறவினர்கள் தங்களது துக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றனர். மும்பை பத்லாப்பூரை சேர்ந்த தீபக் என்ற ஏர் இந்தியா ஊழியரும் இந்த விபத்தில் இறந்துள்ளார்.
அவரது உடல் இன்னும் டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்படவில்லை. அவரது தந்தை மற்றும் அவரின் இரு சகோதரிகளின் கணவர்கள் இன்னும் அகமதாபாத்தில் காத்திருக்கின்றனர்.
நவிமும்பையை சேர்ந்த மைதிலி பாட்டீல் என்ற பணிப்பெண்ணின் உடலும் இன்று காலையில்தான் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர்.