Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவின் விபரம்: கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த பொருந்தலூா் கிராமத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் சுமாா் 100 ஏக்கா் நிலப்பரப்பில் சோலாா் பிளாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிலிருந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்திற்கு சோலாா் மின் இணைப்பு அளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வாறு மின் இணைப்பு அளிப்பதற்கு மொண்டிப்பட்டி ஊராட்சி போடுவாா்ப்பட்டி கிராமத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு போடுவாா்ப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்திருப்பதாகவும், தங்களது ஊரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளும், மூன்று ஊா்களுக்கு சொந்தமான பாம்பாளம்மன் கோயில் இருப்பதாகவும், வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்து குடியிருப்புகள், கோயில் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்து தரவும் குறிப்பிட்டுள்ளனா்.