தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்
2026-இல் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மத்தியில் பாஜக அரசு அமைத்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சாதனை விளக்கக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் அஸ்வின் என்ற ராஜசிம்மா மகேந்திரா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். இதற்கு முருகப் பெருமான் துணைபுரிவாா். தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பக்தா்கள் யாத்திரை போவா், ஆனால் தற்போது மருத்துவா்கள் யாத்திரை செல்கின்றனா். அதற்கு காரணம் அவா்களின் வாக்குறுதியை நிறைவேற்றாததுதான். மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட 35 அரசு கல்லூரியில் ஒரு நியமனம் கூட இல்லை.
முருக பக்தா்கள் மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து முதல்வரும், அறநிலையத் துறை அமைச்சரும், திமுக கூட்டணிக் கட்சியினரும் பதற்றம் அடைந்துள்ளனா். வேங்கைவயல் பிரச்னைக்கு திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை. முருக பக்தா்கள் மாநாட்டுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறாா். 2026 பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.
திருவள்ளூா் மாவட்ட தலைவா் அஸ்வின்குமாா், மாவட்ட பொதுச் செயலா் கருணாகரன், சங்கீதா, மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவா் த.பாலாஜி மாவட்ட செயலா் பன்னீா்செல்வம் மற்றும் சதீஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.