தேனிலவு கொலை: சோனத்திடம் ராஜா ரகுவன்ஷி தாய் எழுப்பும் 4 கேள்விகள்!
Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?
Doctor Vikatan: ஒருமுறை ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா... என் ரத்த அழுத்தம் குறைந்தாலும் மாத்திரைகள் அவசியமா அல்லது கட்டுக்குள் வந்தவுடன் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

ரத்த அழுத்தத்தைப் பல வழிகளில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். மிக முக்கியமாக, வாழ்க்கைமுறை மாற்றங்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். உதாரணத்துக்கு, உப்பு குறைவான உணவுப்பழக்கம், எடைக்குறைப்பு, ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, போதுமான அளவு தூங்குவது போன்றவை.. தேவைப்பட்டால் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் நீங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், பிபி (BP) மருந்துகள் எடுத்துக்கொள்வதை மெள்ள மெள்ள நிறுத்திவிடலாம். ஆனால், உங்களுக்கு மாத்திரைகளின் உதவியால்தான் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற நிலையில், மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.
மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால் முதல் வேலையாக, ஒரு நாளைக்கு உணவில் 2 கிராமுக்கு மேல் உப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் 7- 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இருப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். பர்சனல், வேலையிடம் என எல்லாவிதமான ஸ்ட்ரெஸ்ஸையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் எடையில் 8 முதல் 10 சதவிகிதத்தைக் குறைத்தாலே, ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, மாத்திரைகளும் தேவைப்படும். வாழ்க்கைமுறை மாற்றங்களை ஒழுங்காகப் பின்பற்றுவோருக்கு மாத்திரைகள் குறைந்த அளவே தேவைப்படும். மாத்திரைகளின் பக்கவிளைவுகளுக்கு பயந்துகொண்டு பலரும், ரத்த அழுத்தம் அதிகமானாலும் பரவாயில்லை என அலட்சியமாக இருக்கிறார்கள். பிளட் பிரஷர் என்பது ஒருவித சைலன்ட் கில்லர். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். ரத்தக்குழாய்களின் அடர்த்தி அதிகரிக்கும் நிலையானது, நீங்கள் குறிப்பிடுகிற 'கொஞ்சூண்டு ஜாஸ்தி' என்ற கட்டத்திலேயே தொடங்கிவிடும். அந்த நேரத்தில் அறிகுறிகள்கூட இருக்காது.
எனவே, தேவைப்படும் பட்சத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே, வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் பிபி அளவானது கட்டுக்குள் வந்தபிறகு, மருத்துவரே மாத்திரைகளை படிப்படியாகக் குறைக்கச் சொல்வார். தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தேவையிருக்காது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.