Retro நாயகிகள் 08: `சுற்றி 200 பேர்; அந்தப்பாம்பு காட்சி எடுக்கிறப்போ.!' - துறுதுறு நாயகி ஜெயசித்ரா
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, துறுதுறுன்னு இருக்கிற ஒரு ஹீரோயின் கேரக்டர் எப்படி இருக்கணும்னு டிரெண்ட் செட் பண்ண நடிகை ஜெயசித்ரா. அவங்களைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..!

ஜெயசித்ராவோட பூர்வீகம் ஆந்திரா. ஆனா, ஜெயசித்ரா பிறக்கிறதுக்கு முன்னாடியே அவங்கப்பாவோட வேலை காரணமா சென்னையில செட்டில் ஆகியிருக்காங்க. அப்பா மகேந்திரன் கால்நடை மருத்துவர். அம்மா ஜெயஸ்ரீ, 'அம்மாயி'ங்கிற பேர்ல தெலுங்கு படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வெச்ச பேர் லட்சுமி ரோகிணி தேவி. சென்னை வித்யோதயா ஸ்கூல்ல தான் ரோகிணி படிச்சிருக்காங்க.
சின்ன வயசுல அம்மாகூட ஷூட்டிங் போனவங்களுக்கு இயல்பாவே நடிப்பு மேலேயும் டான்ஸ் மேலேயும் ஆர்வம் வந்திருக்கு. மகளோட ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டிருக்காங்க. குச்சுப்புடியும் பரத நாட்டியமும் லட்சுமி ரோகிணி தேவிக்கு அத்துப்படி. தெலுங்குப் படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிட்டு இருந்தவங்க, 11 வயசுல குச்சுப்புடியில அரங்கேற்றமும் செஞ்சிருக்காங்க.

1972-ல குறத்தி மகன்'ங்கிற தமிழ்ப்படத்துல ஹீரோயினா அறிமுகமாகுறாங்க லட்சுமி ரோகிணி தேவி. அப்போ, அவங்களோட வயசு ஜஸ்ட் 15. படத்தோட டைரக்டர் கே.எஸ். கோபால கிருஷ்ணன் 'ஜெய்'ன்னா வெற்றி, 'சித்ரம்'னா ஓவியம். அதனால இனிமே நீ 'ஜெயசித்ரா'ன்னு பேர் மாத்தியிருக்கார். படம் வெளிவந்தவுடனே ஜெயசித்ராவோட துறுதுறுப்பான அழகும், நடிப்பும் ரசிகர்களுக்கும் பிடிச்சுப்போச்சு; தமிழ் சினிமாவுக்கும் பிடிச்சுப்போச்சு.
இந்தக் காலகட்டங்கள்ல ஜெய்சித்ராவோட படங்கள் பொம்மை, பேசும் படம் மாதிரியான சினிமா பத்திரிகைகள்ல வர ஆரம்பிக்க, ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் 'ரோகிணி, இது உன்னை மாதிரி இருக்கு. ஆனா, பேரு ஜெயசித்ரான்னு போட்டிருக்கேன்'னு கேட்டிருக்காங்க. ஆனா, அது நானில்லைன்னு ரொம்ப நாள் ஜாலியா ஏமாத்திட்டு இருந்தாங்களாம் ஜெயசித்ரா. ஆனா, அடுத்தடுத்து வாழையடி வாழை, அரங்கேற்றம், ஸ்கூல் மாஸ்டர், பாரத விலாஸ், பொண்ணுக்கு தங்க மனசுன்னு வரிசையா படங்கள்ல நடிக்க ஆரம்பிக்க, 'நம்ம ரோகிணி தான் ஜெயசித்ரா'ன்னு ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் கண்டுபிடிச்சிட்டாங்களாம்.

'' 'பாரத விலாஸ்', 'பொண்ணுக்கு தங்க மனசு' படங்கள்ல நடிக்கிறப்போ எனக்கு கால் பரீட்சை, அரை பரீட்சை நடந்துக்கிட்டிருந்துச்சு. ஷூட்டிங் முடிச்சிட்டு எக்ஸாம் எழுதப் போனேன். படிப்பை விட்டுடக்கூடாதுன்னு ஒருபக்கம். அதே நேரம் நான் நடிப்பை ரொம்ப நேசிச்சேன். அதனால, கிடைச்ச வாய்ப்பை தவற விட்டுடக்கூடாதுன்னு தவிப்பு ஒருபக்கம். எப்படியோ ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிட்டேன்''னு ஒரு பேட்டியில ஜெயசித்ரா ஷேர் பண்ணியிருக்காங்க.
ஜெயசித்ராவோட கரியர்ல டர்னிங் பாயிண்ட் கொடுத்த படங்கள்னா, அது 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'வெள்ளிக்கிழமை விரதம்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'சினிமா பைத்தியம்'னு தாராளமா சொல்லலாம். இந்தப் படங்கள்ல நடிச்ச அனுபவங்கள்பத்தி அவங்களே ஒரு பேட்டியில மனசுவிட்டுப் பேசியிருக்காங்க.

'' 'சொல்லத்தான் நினைக்கிறேன்' புஷ்பா கேரக்டரை உன்னை மனசுல வெச்சுதான் நான் எழுதினேன். நீ தான் நடிக்கணும்னு சொல்லிட்டார் கே.பி.சார். அந்த கேரக்டரோட ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் எனக்கு சொல்லிக் கொடுத்துட்டு 'அவ பண்ணிடுவா'ன்னு என்கிரேஜும் பண்ணுவார். துறுதுறுன்னு இருக்கிற ஒரு காலேஜ் பொண்ணு கேரக்டர்னா நடிகை ஜெயசித்ரான்னு இன்னிக்கும் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கிறதுக்குக் காரணம் அவர்தான்.
'வெள்ளிக்கிழமை விரதம்' படத்துல ஒரு பாம்புகூட நடிச்சேன். அதுல, ஒரு சீன்ல நான் மயக்கத்துல இருப்பேன். அப்போ, அந்த பாம்பு என் மேல ஏறுகிற மாதிரி ஒரு சீன். நான் மயக்கமா இருக்கிற மாதிரி நடிக்கிறதால, பாம்பு என்மேல ஏறுகிறப்போ பயத்துலகூட நான் அசையக்கூடாது. என்னைச்சுத்தி மூணு கேமரா. கிட்டத்தட்ட 200 பேர் நான் நடிக்கிறதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்க. அந்த பாம்போ என் மேல மெள்ள ஊர்ந்து, காதுகிட்ட ஏதோ ரகசியம் பேசுற மாதிரி கொஞ்ச நேரம் நின்னுட்டு அதோட நாக்கால என உதட்டுல தட்டுச்சு. நான் கண்ணைத் திறக்கவே இல்லையே. படம் வெளியானதும் அந்த சீனுக்கு ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு தியேட்டருக்கு போயிருந்தேன். பயங்கர கிளாப்ஸ். சிலருக்கு சாமிகூட வந்துச்சு.

'சினிமா பைத்தியம்' படத்துல, நடிகர் ஜெய்சங்கரோட ஃபேனா நடிச்சிருப்பேன். நடிப்பை நிஜம்னு நம்புற ஒரு கேரக்டர். இந்தியில 'குட்டி'ங்கிற பேர்ல இந்தப்படம் வெளிவந்துச்சு. அங்க ஜெயபாதுரி (ஜெயா பச்சன்) நடிச்சாங்க. தமிழ்ல நான் நடிச்சேன். என்னோட கேரக்டர் அந்த நேரத்துல ரொம்ப பரபரப்பா பேசப்பட்டுச்சு.
'இளமை ஊஞ்சலாடுகிறது' ஸ்ரீதர் சாரோட படம். இந்தப்படத்தோட ஹீரோயின் கேரக்டர்ல யார் வேணும்னாலும் நடிக்கலாம். ஆனா, தோழியோட காதலனை விரும்புற ஜெயந்தி கேரக்டரை நீ தான் செய்யணும்னு சொன்னார். கொஞ்சம் ஏமாந்தாலும் நெகட்டிவ் ஷேட் வரக்கூடிய கேரக்டர் அது. அதுதான், 'துணிச்சலான கேரக்டர்னா ஜெயசித்ராவை நடிக்க வைக்கலாம்'கிற நல்லப்பேரை வாங்கிக் கொடுத்துச்சு''ன்னு திருப்தியா சொல்லியிருக்காங்க ஜெயசித்ரா.

72-ல முதல் தமிழ்ப்படம். 82-ல நூறாவது தமிழ்ப்படம் 'நாயக்கரின் மகள்'. 83-ல பெற்றோர் பார்த்து செஞ்சு வெச்ச திருமணம். கணவர் கணேஷ் ஒரு தொழிலதிபர். இந்த இடைப்பட்ட 10 வருடங்கள்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு கிட்டத்தட்ட 200 படங்கள்ல நடிச்சிருக்காங்க ஜெயசித்ரா. ஒரே வருடத்துல 23 படங்கள்ல நடிச்சதா அவங்களே சொல்லியிருக்காங்க. இது எப்படி சாத்தியமாச்சுங்கிற நம்மளோட ஆச்சரியத்துக்கும் அவங்களே பதில் சொல்லியிருக்காங்க.
''ஃபிளைட்ல பறந்து பறந்து நடிச்சேன்னுதான் சொல்லணும். சென்னையில ஷூட்டிங் முடிச்சிட்டு விடியற்காலையில ஹைதராபாத்துக்கு போறப்போ ஃபிளைட்லேயே பல்லு தேய்ச்சிருக்கேன். ஒருநாளைக்கு நாலைஞ்சு மணி நேரம் தூங்க கிடைச்சாலே அதிகம்''னு சொல்ற ஜெயசித்ரா, அவங்களோட 5 வயசுல இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் நாட்டிய நாடகங்கள் நடத்தியிருக்காங்க.

திருமணத்துக்குப் பிறகு, கணவர், வீடுன்னு இருந்தவங்களைத் தேடி 'அக்னி நட்சத்திரம்' படத்துல கார்த்திக்கோட அம்மா ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. அஞ்சு வருஷம் கழிச்சு அப்போ தான் ஜெயசித்ரா தாய்மை அடைஞ்சிருக்காங்க. ஆனா, தன் வொய்ஃபோட திறமைக்கு தடை போடக்கூடாதுன்னு கணவர் கணேஷ் நடிக்கும்படி சொல்ல, ஜெயசித்ராவும் யெஸ் சொல்லியிருக்காங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான், இவங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கு.
இந்த நேரத்துல அடுத்த வாய்ப்பு. படம் 'புதுப்புது அர்த்தங்கள்.' ''கே.பி. சார் தமிழும் தெலுங்கும் பேசுற அந்த 'காக்கி நாடா' காஞ்சனா கேரக்டர்ல கட்டாயம் நீ தான் நடிக்கணும்னு சொல்லிட்டார். அப்போ நான் என் பையன் அம்ரீஷ்க்கு தாய்ப்பால் கொடுத்துட்டு இருந்த நேரம். அதை சொன்னதும், மகாலிங்கபுரத்துல என் வீட்டுக்குப் பக்கத்துலேயே ஒரு வீட்ல ஷூட்டிங்கை வெச்சுக்கிட்டார் பாலச்சந்தர் சார்''னு நெகிழ்ச்சியா சொல்ற ஜெயசித்ரா, 1991-ல 'புதிய ராகம்' அப்படிங்கிற ஒரு படத்தை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செஞ்சாங்க. இந்தப்படத்துல அவங்களோட மகன் குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகியிருப்பார்.

அதுக்கப்புறம் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு அம்மாவா தன்னோட கரியரை தொடர்ந்தவங்க 'அலைகள்', 'ரங்க விலாஸ்'னு சில டி.வி சீரியல்கள்லேயும் நடிச்சாங்க. 'பொன்னியின் செல்வன்' படத்துல 'செம்பியன் மாதேவி' கேரக்டர்ல நம்ம எல்லோருக்கும் சர்ப்பிரைஸ் கொடுத்தாங்க.
தன்னோட நடிப்புத்திறமைக்கான அங்கீகாரமா கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஆந்திர அரசாங்கத்தோட நந்தி விருது பெற்றிருக்கிற ஜெயசித்ரா, தன்னைப்பத்தி சொல்லியிருக்கிற ஒரு விஷயம், சினிமா தான் வாழ்க்கைன்னு முடிவெடுத்திருக்கிற பல யங்ஸ்டரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒண்ணு. அது, ''எந்த டைரக்டருக்கும் நான் கஷ்டம் கொடுத்ததில்லை; ஃபிலிம் வேஸ்ட் பண்ணதில்லை; அவங்களோட டைம் வேஸ்ட் பண்ணதில்லை''ங்கிறதுதான் அது!
(நாயகிகள் வருவார்கள்...)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR