ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் உதம்பூரில் இந்திய ராணுவ வீரர்களுடனான யோகா நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
"ராணுவ வீரர்கள் உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் வலிமை மிக முக்கியம். அத்துடன் உடல்நலனும் முக்கியம். நீங்கள் வலிமையாக இருந்தால் நமது எல்லைகள் வலுவாக இருக்கும். எல்லைகள் வலுவாக இருக்கும்போது, இந்தியா வலுவாக இருக்கும்" என்று கூறினார்.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், "இந்திய மண்ணில் ஏற்படும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த வகையான நடவடிக்கையையும் எடுக்க இந்தியா தயாராக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் பயங்கரவாதம் செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதையும் பாகிஸ்தானுக்கு சொல்லி இருக்கிறோம். இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் கொள்கை ஒருபோதும் நிறைவேறாது என்று காட்டியிருக்கிறோம்" என்று பேசினார். இந்த நிகழ்வில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதியும் கலந்துகொண்டார்.
இதையும் படிக்க | நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்