இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?
மின்சார வாகன உற்பத்தியில் பெரிதும் விரும்பப்படும் டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவிலும் தடம் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் ஜூலை மாதத்தில், தனது கார் ஷோரூமை டெஸ்லா தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் டெஸ்லா பிரியர்கள் பலரும் நீண்டகாலமாக ஆவலில் உள்ள நிலையில், தற்போது அது சாத்தியமாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில், தற்போது கார் விற்பனையில் மின்சார வாகனங்களே 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக விற்பனையாவதாக தரவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில்தான், இந்தியாவில் முதலில் மும்பையிலும், தொடர்ந்து தில்லியிலும் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களைத்தான் இந்தியாவில் இறக்குமதி செய்யவுள்ளனர்.

டெஸ்லாவின் மாடல் ஒய் மற்றும் மாடல் 3 கார்கள்தான் இறக்குமதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தக் கார்களை விற்பனை செய்யத்தான், டெஸ்லா காப்புரிமைக்கான விண்ணப்பம் செய்துள்ளது. இருப்பினும், இந்த 2 மாடல்களிலும் ஒய் மாடலைத்தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
மாடல் ஒய் கார்கள், 526 கி.மீ. மைலேஜ் கொடுப்பதுடன், அதிகபட்சமாக 200 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், வெறும் 4.6 விநாடிகளில்யே 96 கி.மீ. வேகத்தை எடுக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் 8 கேமராக்கள், தானியங்கி எமர்ஜென்ஸி பிரேக்கிங், மோதாமலிருக்க எச்சரிக்கை உள்பட பல அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. டெஸ்லாவின் மாடல் 3, ரூ. 60 லட்சமாகவும், மாடல் ஒய் ரூ. 70 லட்சமாகவும் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?