அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!
அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது.
ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் பதிவேடு’ முறையை தொடங்கியுள்ளது.
இதன்மூலம், பரவலான மக்களிடம் இருக்கும் இரத்த வகைகளைச் சாராதவர்கள் நோய்வாய்ப்பட்டு iரத்தம் தேவைப்படும்போது, தாங்கள் சார்ந்துள்ள அரிய வகை இரத்த வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அரிய வகை இரத்தம் உள்ளவர்களை தொடர்புகொள்ள வசதியாக இந்த பதிவேடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த பதிவேடானது, குறிப்பிட்ட சில ரத்த வகைகளைச் சார்ந்த மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று ஐசிஎம்ஆர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரத்தம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இ-ரக்தகோஷ் என்ற மத்திய அரசின் தளம் செயல்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் இரத்த தானம் செய்வோர் இருக்கின்றனர். இரத்த வங்கிகள் செயல்படும் இடங்கள் ஆகியன பற்றிய விவரங்களின் குறிப்பே இந்த இ-ரத்தகோஷ் தளம்.
இந்தநிலையில், இ-ரக்தகோஷ் தளத்துடன் இந்த புதிய பதிவேட்டினையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை சுகாதார சேவைகள் துறையின் பொது இயக்குநரகத்துடன் நடைபெற்று வருகிறது என்றும் ஐசிஎம்ஆர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.