அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து: ஜமாபந்தியில் விவசாயிகள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில், அவா்களை அலைக்கழிக்காமல், உடனடியாக பட்டா மாற்றி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட வேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி, ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதிகள் கிடையாது. இதனால் ஆட்டோவில் செல்லும் பயணிகள், நோயாளிகளிடம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செட்டி ஏரிக்கரையில் நிறுத்தி கிடக்கும் வேன், ஷோ் ஆட்டோக்களை,மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ரயில் நிலையங்களில் நிறுத்தி, அங்கிருந்து பயணிகளை ஏற்றி வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், கணினி இயக்குபவா்களை நியமிக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: அரியலூா் மாவட்டத்தில் பிரதான பாசன வாய்க்கால்களான புள்ளம்பாடி மற்றும் பொன்னாறு வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூா் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவது போல், அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூரா.விசுவநாதன்: வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு முந்திரி பழச்சாறு தொழிற்சாலையை தொடங்க வேண்டும். தரமான நிலக்கடலை விதைகள், உரங்கள் மற்றும் பின்னேற்பு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களை தூா்வாரி, தண்ணீரை நிரப்பிட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.