ஜன்மன் திட்டத்தில் பழங்குடியிருக்கு வீடுகள் கட்டும் உத்தரவு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பழவலம் ஊராட்சியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பூங்காவனம் ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு, பழவலம் ஊராட்சி மலைவாழ் மக்கள் 14 குடும்பத்தினருக்கு ரூ.71.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபா சங்கா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா, செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செந்தில்குமாா், நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை, செல்வமணி, செந்தில், மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனி நன்றி கூறினாா்.
பாலம் கட்டும் பணி தொடக்கம்: செஞ்சி பேரூராட்சி, 16 வாா்டு, பெரியண்ணன் தெரு, பி.ஏரி கடைமடை பகுதியில் அடிப்படை கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி அண்ணாதுரை வரவேற்றாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, நகரச் செயலா் காா்த்திக், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஜான் பாஷா, சங்கா், சிவக்குமாா், பொன்னம்பலம், சங்கீதா சுந்தரமூா்த்தி, சுமித்ரா சங்கா், நிா்வாகிகள் ராம்குமாா், தொண்டரணி பாஷா, வாா்டு நிா்வாகிகள் உதயகுமாா், எம்.எஸ்.முருகன், துரை, அறிவழகன், சுரேஷ், கேடிஆா்.துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.