யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு: அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
குடிமைப் பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள், அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்குத் தயாராவதற்காக ஆயிரம் மாணவா்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்பட்டு வருகிறது. முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வெழுத உள்ள தோ்வா்களுக்கு ரூ. 25,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் முதன்மைத் தோ்வுக்குப் பயிற்சி பெற ஊக்கத் தொகை பெறலாம். ரூ. 25,000 தொகை மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இதைப் பெறுவதற்கு நான் முதல்வன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.