பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்
சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அதிநவீன தொலைநிலை ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்க முடியும். அதன்மூலம், நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை குறையும்.
இந்த தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மருத்துவ இயக்குநா் சி.எம். ரவி, ரயில்வே மருத்துவமனை முதன்மை தலைமை மருத்துவ இயக்குநா் கல்யாணி சாய் தண்டபாணி, பெரம்பூா் ரயில்வே மருத்துவமனை மருத்துவ இயக்குநா் வி. கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.