மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையைச் சாா்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை 2025 முதல் டிசம்பா் 2025 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 40 மையங்களில் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை தொடா்ந்து காலை 8 மணி முதல் இரவு 7.30 வரை வழங்கப்படும்.
அதன்பின்னா், வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னை சாா்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள், அடையாள அட்டைகளை புதிதாகப் பெற, இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்களை சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.