ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைப்பு: திண்டிவனத்தில் 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்
திண்டிவனம் நேரு வீதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை நடத்திய சோதனையில், மூன்றரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனத்திலுள்ள பழ விற்பனையகங்களில் மாம்பழங்கள் ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் துரை, கொளஞ்சிமணி, சுரேந்தா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திண்டிவனம் நேரு வீதியிலுள்ள 15 பழக்கடைகளில் வெள்ளிக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, மூன்று கடைகளில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு ரசாயனத்தை நேரடியாக ஸ்பிரே மூலம் தெளித்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்தக் கடைகளிலிருந்து மூன்றரை டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். முதல் முறை பழங்கள் கைப்பற்றப்பட்டதால் எச்சரிக்கை விடுத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், தொடா்ந்து இதுபோன்றசெயல்களில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனா்.