முதல் எலெக்ட்ரிக் விமான சேவை; வெறும் ரூ. 694, 96% விலை குறைவு; வான்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்!
எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்கள் வரிசையில் இப்போது எலெக்ட்ரிக் விமானமும் வந்துவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜிஸ் (BETA Technologies) என்ற நிறுவனம் 2022 முதலே எலெக்ட்ரிக் விமானங்களைத் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதலில் சரக்கு மற்றும் மருத்து அவரச உதவிகளுக்கான எலெக்ட்ரிக் விமானங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தது. இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு முதலே 4 பேர் பயணிக்கும் எலெக்ட்ரிக் விமானங்களை அறிமுகப்படுத்தி அதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது.

தற்போது உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை வானில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு விமான சேவை வரலாற்றில் புதியதொரு மைல்கல்லை வைத்துள்ளது. பீட்டா டெக்னாலஜிஸின் இந்த 'Alia CX300' வகை எலெக்ட்ரிக் விமானம் அமெரிக்காவின் கிழக்கு ஹாம்ப்டன் முதல் நியூயார்க்கு நகர ஜான் எஃப். கென்னடி விமான நிலையம் வரை 130 கிலோமீட்டர்கள் 30 நிமிடங்களில் 4 பயணிகளுடன் வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது.
இப்போதைய எரிபொருளில் இயக்கும் விமானத்தைவிடவும் இந்த எலெக்ட்ரிக் விமான டிக்கெட்கள் 96% வரை விலை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கிழக்கு ஹாம்ப்டன் முதல் நியூயார்க்கு நகர ஜான் எஃப். கென்னடி விமான நிலையம் வரை சாதாரண விமானங்களுக்கு ரூ.13,885 ($160) வரை டிக்கெட் விலை வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த எலெக்ட்ரிக் விமானத்தில் வெறும் ரூ. 694 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சோதனை முறையில் இயக்கப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் விமானங்கள் விரைவில் உலகின் பல பகுதிகளுக்குக் குறைந்த விலையில் பறக்கவிருப்பதாக பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் சொல்கிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கைல் கிளார்க், "இது 100% மின்சார விமானம். இதில் முதல் முறையாக 35 நிமிடங்களில் 130 கிலோமீட்டர்களைக் கடந்திருக்கிறோம். இந்த விமானத்தை சார்ஜ் செய்துவிட்டுப் பறப்பதற்கு மிகக் குறைந்த செலவேயாகிறது. மிகக் குறைந்த விலையில் உலகம் முழுவதும் எங்கள் எலெக்ட்ரிக் விமானங்கள் பாதுகாப்பாக விரைவில் பறக்கும்" என்று கூறியிருக்கிறார்.