Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன நடக்கிறது வேலூரில்?
வேலூர் மாவட்டம், இறைவன்காடு ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் வீடுகள் கட்டி வசித்து வரும் 150 குடும்பங்களிடம் திடீரென மாதாந்திர தரை வாடகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது விரிஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள `கீழாண்டை நவாப் மசூதி மற்றும் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்கா’ எனும் பள்ளி வாசல் நிர்வாகம். இந்த நோட்டீஸ் கடந்த பிப்ரவரி 27-ம் தேதியன்றே அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், 4 தலைமுறைகளாக அதே பகுதியில் வசிப்பதால் காட்டுக்கொல்லை கிராம மக்கள் மசூதி தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸை தட்டிக்கழித்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் மசூதி தரப்பில் `ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும்’ என எச்சரித்து, 7 நாள்கள் கெடு கொடுக்கப்பட்டதால், காட்டுக்கொல்லை கிராம மக்கள் கொதிப்படைந்தனர். விவகாரமும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட மசூதி பெயரில், பரம்பரை முத்தவல்லி எனக் குறிப்பிட்டு சையத் சதாம் என்பவர் தான் நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்.

நோட்டீஸில், ``கீழாண்டை நவாப் மசூதி - ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்காவுக்குச் சொந்தமான வக்ஃப் வாரிய இடத்தில் தாங்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யும் வண்ணம் வீடு, கடை கட்டி குடியிருந்து வருகிறீர்கள். இது வக்ஃப் வாரிய சட்டத்துக்கெதிரான செயலாகும். மேலும், தாங்கள் வசித்து வரும் இடமானது மேற்கண்ட மசூதிக்கு பாத்தியப்பட்டதாகும். இவ்விடத்தின் மீது பதியப்பட்ட முறையற்ற பதிவுகள் அனைத்தும் மத்திய பதிவு சட்டம் 1908 பிரிவு 22 (A)-ன் படி மற்றும் 1995 பிரிவு 104 (A)-ன் படி ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பதிவுத் துறைக்கும், வக்ஃப் வாரியத்தின் மூலம் மாவட்ட பதிவுத் தலைவர் மற்றும் பள்ளிகொண்டா சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த இடத்தில் வசிக்க வக்ஃப் வாரிய விதிமுறைகள் உள்ளன. அதனை பின்பற்றியே இந்த இடத்தில் வீடு, கடை கட்டி வசிக்க முடியும். மேலும், இவ்விடத்தில் தொடர்ந்து குடி வாழ்வதற்கு மசூதி நிர்வாகத்திடம் ஒப்பந்த ஆவணம் பெற்று மாதாந்திர தரை வாடகையை செலுத்தி வர வேண்டும். தவறும் பட்சத்தில் வக்ஃப் வாரிய சட்டத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு என்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் என்பதையும் மசூதி நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கப்படுகிறீர்கள். எனவே, இந்த கடிதம் கிடைத்த 7 நாள்களுக்குள் மேற்கண்ட மசூதி நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் காட்டுக்கொல்லை கிராம மக்கள் மனு கொடுத்திருக்கின்றனர். ``4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். வீட்டுக்கு மின் இணைப்பு, குழாய் இணைப்பு உள்ளிட்ட பல ஆவணங்கள் இருக்கின்றன. இப்போது, மசூதியைச் சேர்ந்தவர்கள் வக்ஃப் நிலம் என நோட்டீஸ் அனுப்பி எங்கள் நிலங்களை அபகரிக்க முயல்கின்றனர். எனவே, எங்கள் வீடுகளுக்குப் பட்டா வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர். அதே சமயம், ``இந்த மசூதி தர்கா 2020-ல் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு காட்டுக்கொல்லை கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’’ என இந்து முன்னணியும் தலையிட்டிருப்பதால், சமூக பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், ``பல தலைமுறைகளாக காட்டுக்கொல்லை கிராமத்தில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சட்டவிரோதமாக துரத்தும் நோக்கில் செயல்படுவோர் மீது தகுந்த நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். காட்டுக்கொல்லை கிராம மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லையென்றால், அந்தக் கிராமத்துக்குச் சென்று மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க பா.ஜ.க அஞ்சாது என்பதையும் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பிரச்னையில், உரிய முடிவு எடுப்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து நிலஉரிமை ஆவணங்களை சரிபார்த்துகொண்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.