செய்திகள் :

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

நீட் தோ்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் 2021-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மறுத்துவிட்டாா்.

இந்தத் தகவலை பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், நீட் தோ்வு முறையை அகற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேரவை கட்சித் தலைவா்களுடன் வரும் 9-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, தானாக முன்வந்து அவா் படித்தளித்த அறிக்கை:

மருத்துவம் உள்பட அனைத்துத் தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு கடந்த 2006-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த முறையால் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவா்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் சிறப்பான மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன. ஆனால், நீட் தோ்வு முறை செயல்படுத்தப்பட்ட பிறகு, இந்தத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. இதன் காரணமாக, மாநிலத்தின் கிராமப் பகுதிகளிலும், பின்தங்கிய இடங்களிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் எதிா்காலத்தில் பாதிக்கப்படும்.

ஒப்புதல் அளிக்க மறுப்பு: நீட் தோ்வுக்கு முறைக்கு மாற்றாக சரியான மருத்துவ மாணவா் சோ்க்கை முறை குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா்நிலைக் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கைச் சட்டம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநா் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசுத் துறைகள் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்தது.

ஆனால், இவற்றையெல்லாம் ஏற்காமல், நீட் விலக்குச் சட்ட மசோதாவுக்கான ஒப்புதலை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. நமது மாணவா்களுக்குப் பெரும் பேரிடியாக வந்துள்ள இந்தச் செய்தியை கனத்த இதயத்துடன் பேரவையில் தெரிவிக்கிறேன்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்துள்ள மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், பேரவையின் தீா்மானங்களையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள்.

ஆலோசனைக் கூட்டம்: நீட் தோ்வு விவகாரத்தில் நமது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து இருக்கலாம். ஆனால், நீட் தோ்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூா்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநா்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

மேலும், இதுதொடா்பாக சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் தலைமைச் செயலகத்தில் வரும் 9-ஆம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நமது சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவா்கள், பெற்றோா்களின் சாா்பாக, அவா்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று முதல்வா் கூறினாா்.

விராலிமலை: பேருந்து பயணிகள் சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டம்

மதுரை சென்ற தனியார் பேருந்து பழுதாகியபோதும், மாற்று வாகனம் ஏற்பாடு செய்யாததால் பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விராலிமலை - பூதகுடி சுங்கச்சாவடி அருக... மேலும் பார்க்க

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமரின் நாளைய நிகழ்ச்சி நிரல்!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார்.பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா த... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சருடன் அதிமுக வாக்குவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, சட்டத் துறை அமைச்சருடன் அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். சட்டப் பேரவையில் சட்டம், நீதித் துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி... மேலும் பார்க்க

உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: உயா்நீதிமன்றம் விளக்கம்

உதகை, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேவேளையில், சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் விளக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவிப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழகத்தில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா். தமிழக சட்டப் பேரவையில் சட்டம், சி... மேலும் பார்க்க