தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும்...
நீலகிரியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை; நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விடுவிப்பு!
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதி, மக்கள் குடியிருப்புகள், தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றித் திரிந்த ’ராதாகிருஷ்ணன்’ என்ற யானை, அப்பகுதியில் இதுவரை 12 பேரை பலி வாங்கி உள்ளது.

இதனையடுத்து வன உயிரின முதன்மை பாதுகாவலர் டோக்ராவின் உத்தரவின்படி வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு 50-க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் 4 கும்கி யானைகள், 10 ட்ரோன் கேமராக்கள், மயக்க ஊசி உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம், 16-ம் தேதி முதல் 5 நாட்களாகத் தேடி செப்.22-ம் தேதி கூடலூர் அருகே எல்லமலை குறும்பர்மேடு பகுதியில் கண்டுபிடித்து மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கி மூலம் ஊசி செலுத்தி யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
பின்னர், கும்கி யானைகளின் உதவியுடன் முதுமலை புலிகள் காப்பகம் அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மரக்கூண்டில் அடைக்கப்பட்டு தேவையான தண்ணீர், உணவு வழங்கப்பட்டது, பின்னர் காட்டு யானை ராதாகிருஷ்ணனை அங்கு கிராலில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 26-ம் தேதி ராதாகிருஷ்ணன் யானையை வனத்துறையினர் முதுமலையிலிருந்து லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வழியாக சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி ரெயில்வே கேட் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை யானைகள் சரணாலயத்தில் ஜி.பி.எஸ் கருவியுடன் காலர் ஐ.டி பொருத்தப்பட்டு மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அப்பாவி மக்களை கொன்று, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்திய தேனியில் பிடிக்கப்பட்ட ”அரிகொம்பன்” என்ற யானையும், நீலகிரி பந்தலூரில் பிடிக்கப்பட்ட ”புல்லட் ராஜா” என்ற யானையும் மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது மூன்றாவதாக நேற்று மாஞ்சோலை வனப்பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற ஆட்கொல்லி யானையும் விடப்பட்டுள்ளது.

இதனால் மாஞ்சோலை, காணிக்குடியிருப்பு மற்றும் பாபநாசம், மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நான்காவதாக ரோலக்ஸ் என்ற டில்லி எனும் மற்றொரு காட்டு யானையும் விரைவில் மாஞ்சோலைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் வனத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஏற்கெனவே சிறுத்தை, கரடிகள் நடமாட்டத்தால் தற்போது காட்டு யானைகள் வனத்திற்குள் விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



















