நீ சின்னப் பொண்ணு கிடையாதுல கிழவிதானேன்னு...! - Meera Krishna & Sushma Shares | ...
பட்டுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியராக கரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா(55) என்பவர் பணியாற்றினார்.

இந்நிலையில், பாஸ்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, வகுப்பறையில், எழுந்து நின்று படிக்க சொல்லியுள்ளார். அந்த மாணவியும் எழுந்து நின்று படித்துள்ளார். அப்போது ஆசிரியர் பாஸ்கர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவி வீட்டுக்குச் சென்றதும் தனது பெற்றோரிடம் ஆசிரியர் பாஸ்கர் நடந்து கொண்டது குறித்து அழுது கொண்டே கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். ஆனால் விஜயா பாலியல் புகாரை துளியும் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. பாஸ்கர் நடவடிக்கை தெரிந்தும் கண்டிக்கவும் இல்லை என்கிறார்கள். இந்நிலையில் பாஸ்கர் தொடர்ந்து பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பள்ளி மாணவிகள் புலம்பியிருக்கின்றனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பாஸ்கரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் ஆசிரியர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர் வகுப்பில் ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் விஜயாவிடம், பல மாணவிகள் பாஸ்கர் சார், பேட் டச் செய்கிறார் என கூறியும் கண்டு கொள்ளாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் தலைமை ஆசிரியர் விஜயா ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
















