சினேகன் தந்தை மறைவு: "எனது தம்பியின் தந்தை மறைவு செய்தி கேட்டு துயருற்றேன்" - கம...
நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்துறை சொல்வது என்ன?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் அவற்றின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.
இதனால் தடம் மாறும் யானைகள், மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடமாட வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை.
மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடும் யானைகளை பிரச்னைக்குரிய யானைகள் (problematic elephant) என வனத்துறையால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
கும்கி யானைகள் மற்றும் மயக்க ஊசி உதவியுடன் அந்த யானையைப் பிடித்து கும்கிகளாக மாற்றுவது அல்லது மாற்றிடத்தில் விடுவிப்பது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வருவதாக அறியப்பட்ட ராதாகிருஷ்ணன் என்கிற ஆண் யானையைக் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், க்ரால் எனப்படும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பிரத்யேக மரக்கூண்டில் அடைத்து வைத்து சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மரக்கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் காட்டு யானையை பழங்குடி பாகன்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த யானையை விடுவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கூண்டில் அடைபட்டிருந்த அந்த யானைக்கு மீண்டும் காடு கிடைத்திருக்கிறது.
ஆனால், அதற்கு ஏற்ற காடாக அது இருக்குமா என்பது குறித்து பதில் அளித்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், " ஓவேலி பகுதியில் மனிதர்களைத் தாக்கி வந்த யானை இது என்பதை ஆய்வு செய்து தான் உறுதி செய்தோம்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்து சரியான நேரத்தில் யானையைப் பிடித்தோம். ஆக்ரோஷமாக இருந்த ராதாகிருஷ்ணனை பழங்குடி பாகன்கள் மட்டுமின்றி கால்நடை மருத்துவர்களும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

சாந்தப்படுத்திய பின்னரே தற்போது மீண்டும் வனத்திற்குள் விடுவித்துள்ளோம். ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து வருகிறோம். கூடலூரில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை இதே பகுதியில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை பகுதியும் கிட்டத்தட்ட கூடலூர் பகுதியைப் போன்றதுதான். மனித நடமாட்டம் மிகவும் குறைவு. அதற்கான உணவு மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் அதிகளவில் உள்ளன.
யானையை வாகனத்தில் ஏற்றிச் செல்வது முதல் விடுவிப்பது வரை எந்தவித சிரமமும் ஏற்படவில்லை. அதற்கு ஏற்றச்சூழலாக இருக்கும்" என்றனர்.



















