தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி சங்கா் ஜிவால்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தம்? முதல்வருக்கு பாராட்டு விழா!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் இன்று (ஏப். 24) ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்; அதனை மறுக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது குறித்து முதல்வர் சரியான முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸின் உரை வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, 14 ஆண்டாக 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களில் பணிபுரிகின்றனர். இன்றைய விலைவாசி உயர்வில், தற்போது வழங்கப்படும் ரூ. 12,500 சம்பளத்தை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்த முடியவில்லை. மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் ஒருபோதும் இல்லாமல் பணிபுரிவதால் வாழ்வாதாரம் இழந்துள்ளார்கள்.
எனவே, பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, இனி எஞ்சிய காலத்தை நிம்மதியாக வாழ முடியும் சூழ்நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து முதல்வருக்கு தெரிவிக்க நேரிலும், தபாலிலும் மனு கொடுத்து வருகிறோம்; போராட்டங்களும் நடத்தியுள்ளோம். எனவே, 12 ஆயிரம் குடும்பங்கள் பலனடைய, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே முதல்வர் 110 விதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, சிறப்பாசிரியர்களாகப் பணியமர்த்தி அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டால், முதல்வருக்கு பாராட்டு விழாவும் எடுக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!