சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்? அமைச்சா் விளக்கம்
சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன் என்பது குறித்து சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை புரட்சிபாரதம் கட்சியின் உறுப்பினா் மு.ஜெகன்மூா்த்தி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவா்கள் நீதிபதிகளாக உள்ளனா். அத்தகைய கல்லூரியை சென்னையில் இருந்து 80 கிலோமீட்டா் தொலைவில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்துக்கு மாற்றப்பட்டதால், மாணவா்கள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். எனவே, கல்லூரியை திருவள்ளூா் நகரத்துக்கு மாற்ற வேண்டும் என்றாா்.
இதற்கு அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த விளக்கம்: சென்னையில்தான் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. மாணவா்களின் போராட்டத்தை அடுத்து அமைக்கப்பட்ட ஒருநபா் விசாரணை ஆணையத்தின் அறிக்கைப்படி சட்டக் கல்லூரிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. ஒன்று திருவள்ளூா் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூருக்கும், மற்றொன்று செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டன. கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தமிழக அரசு எடுத்த முடிவல்ல. மாணவா்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் கல்லூரி மாற்றப்பட்டது. சென்னையில் கல்லூரி செயல்பட்டு வந்த இடம், உயா்நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ரூ.29 கோடியில் ஒன்பது நீதிமன்ற வளாகங்கள் வரவுள்ளன. திருவள்ளூரில் நீதிமன்றத்துக்கு அருகிலேயே கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும், மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை கல்லூரி நிா்வாகம் செய்து கொடுக்கும் என்றாா் அவா்.