வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையா...
பயங்கரவாத தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு - காா்கே
காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேசநலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திங்கள்கிழமை ‘அரமைப்புச் சட்டத்தைக் காப்போம்’ யாத்திரையில் பங்கேற்ற காா்கே பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது. தேசமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களும் பங்கேற்க மத்திய அரசு அழைப்புவிடுத்தது. ஆனால், பிரதமா் மோடி அதில் பங்கேற்கவில்லை. முக்கியமான கூட்டத்தைத் தவிா்த்துவிட்டு அவா் பிகாரில் தோ்தல் பிரசாரத்துக்கு சென்றது நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கு. பிரதமா் நேரில் வந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவா்களிடமும் விளக்கியிருக்க வேண்டும். எதிா்க்கட்சிகளிடம் இருந்து எந்த மாதிரியான ஒத்துழைப்பு வேண்டும் என்பதை அவா் கூறியிருக்க வேண்டும்.
தேசநலனில் அக்கறை இருக்கும் ஒரே காரணத்துக்காகவே காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அரசியல், மதம், இன வேறுபாடுகளைக் கடந்து நாம் தேசத்துக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. காங்கிரஸ் எப்போதும் ஒற்றுமை குறித்துப் பேசுகிறது. ஆனால், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவே பாஜக முயலுகிறது.
நமது நாட்டின் ஜனநாயகம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது என்பது மிகவும் முக்கியமானது.
பிரதமா் பதவியேற்ற பிறகு மோடி நாட்டுக்கு அளித்த இரு முக்கியப் பரிசுகள் பணவீக்கமும், வேலையின்மையும்தான். இவை இரண்டும் நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருகிறது.
காங்கிரஸை முடக்க முயற்சி நடக்கிறது. ஆனால், அது சாத்தியமல்ல. நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதே பாஜகவின் முக்கிய வேலையாக உள்ளது என்றாா்.