விஜய் டிவி பிரச்னைக்கு அடுத்த நாளே ஜீ தமிழில் வாய்ப்பு: மணிமேகலை உருக்கம்
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு மறுநாளே ஜீ தமிழில் வாய்ப்பு கிடைத்ததாக தொகுப்பாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
முழுவதும் பாடல்களுக்காக தொடங்கப்பட்ட சன் மியூசிக் சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை.
இவர் தனக்கே உரித்தான நகைச்சுவைக் கலந்த சுவாரசியத்துடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.
15 ஆண்டுகளாக தொகுப்பாளராக உள்ள மணிமேகலை, தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, முன்னதாக நிறைவு பெற்ற 5-வது சீசன் நிகழ்ச்சியை ரக்ஷனுடன் தொகுத்து வழங்கினார்.

இதில், மணிமேகலைக்கும் சமையல் கலைஞராகப் பங்கேற்ற பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக இல்லை என அறிவித்தார். பின்னர் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார் மணிமேகலை.
இந்த விவகாரத்தில் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக இருந்த நிலையில், ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவு அளித்துவந்தனர்.

ஜீ தமிழ் வாய்ப்பு
2025ஆம் ஆண்டுக்கான சிறந்த என்டர்டெயினர் விருது இம்முறை மணிமேகலைக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலை, எனக்குப் பிடித்த தொகுப்பாளர் பணியை வேண்டாம் என்று என்னை சொல்ல வைத்தார்கள். இதன் பிறகு என் எதிர்காலமே முடிந்துவிட்டது என்பதைப் போன்று பலர் பேசத்தொடங்கினர். என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என அறிவுரை கூறினர். ஆனால், அந்த பிரச்னைக்கு மறுநாளே ஜீ தமிழில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மணிமேகலையின் இந்தப் பேச்சுக்கு அவரின் ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிக்க | ’நீ நான் காதல்’ நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!